Thursday, June 30, 2005

முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!


இரயில் நிலையத்தில்


* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !


இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.


இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.

Sunday, June 26, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 6-வது பதிவு

1. தொழில் நுட்பத்தின் உச்சம் !

ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !

சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.

சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.

உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.

2. நரகமும் தொலைத் தொடர்பும் !


ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன் மற்றும் ஒரு மென்பொருளாளர் ஆகியோர் இறந்தவுடன், நரகத்திற்கு சென்றனர். அரசியல்வாதி, "எந்நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்று அறிய தொலைபேச விரும்புகிறேன்" என்று கூறி, தொலைபேசியில் 5 நிமிடங்கள் பேசி விட்டு, நரகத்திலிருந்த சாத்தானைப் பார்த்து, "நான் பேசியதற்கு கட்டணம் எவ்வளவு?" என்றவுடன், சாத்தான், "5 லட்சம் ரூபாய்" என்றது ! அவர் பதில் பேசாமல் ஒரு செக் எழுதிக் கொடுத்தார் !

அடுத்து, அந்தத் திருடன் தன் சகாக்களுடன் தான் பேச விரும்புவதாகக் கூறி, தொலைபேசியில் 2 நிமிடங்கள் பேசினான். "எவ்வளவு தர வேண்டும்?" என்றதற்கு சாத்தான், "10 லட்சம் ரூபாய்!" என்றவுடன், திருடன் கடுப்புடன் 10 லட்சத்திற்கு செக் கொடுத்தான் !

அந்த மென்பொருளாளன், "நானும் எனது தகவல் தொழில் நுட்பத் துறை நண்பர்களுடன் அளவளாவ ஆசைப்படுகிறேன்" என்று சாத்தானிடம் சொல்லி விட்டு, தொலைபேசியில், தொழில்நுட்பம், பிராஜெக்ட் மற்றும் மேலாளர்கள் குறித்து தொடர்ந்து 20 மணி நேரம் கதைத்து விட்டு, சாத்தானிடம் அலட்சியமாக, "எவ்வளவு கட்டணம்?" என்றான்.

சாத்தான், "நானூறு ரூபாய்!" என்றவுடன் அதிர்ந்து போன அப்பொறியாளன், "என்ன, நானூறு ரூபாய் தானா!!!" என்றவுடன் சாத்தான், "ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்திற்கு தொலைபேசினால் அது உள்ளூர் அழைப்பு (LOCAL CALL) தான்!!!" என்றது !!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 24, 2005

"மெட்டிஒலி" விமர்சனம் --- A DROP in "அந்திமழை" !!!

திருவாளர் மாயவரத்தானின் மகுடம் போல் என் சிறிய மகுடத்திலும் ஒரு சிறிய சிறகு நேற்று ஏறியது :-) அந்திமழைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

பிரபல வலைப்பதிவர்களான அருண், தேசிகன், பத்ரி ஆகியோரைப் பற்றி எழுதிய
அந்திமழை என்னைப் பற்றியும் என் வலைப்பதிவு குறித்தும் எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது !!! இவ்வாறு அறியப்படுவது, நான் நிறையவும், இன்னும் நிறைவாகவும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது!

இதே கட்டுரையில் S.சங்கர் என்ற புதிய வலைப்பதிவரைப் பற்றியும் எழுதப் பட்டிருக்கிறது. என்னையும் S.சங்கரையும் பற்றி ஒரே சமயத்தில் அந்திமழை எழுதியதால், ஒரு வியப்பு தரும் செய்தியை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

சங்கருக்கு வலைப்பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியதும், அவரது வலைப்பூவை வடிவமைத்துக் கொடுத்ததும் சாட்சாத் பாலாவே (நான் தானுங்கோ !) தான் !!!

மேலும், சங்கர் என் நீண்ட நாள் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் !) நண்பரும் கூட !

"எழுதுவதோடு மற்ற வலைப்பூக்களில் ஆக்கப்பூர்வமான மறுமொழிகளையும் பதிக்கிறார்" --- இதாங்க நம்மளப் பத்தின அந்திமழையோட Highlight !!! அப்றம், நீங்க சொல்லுங்க !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 20, 2005

மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் --- பாலா SPECIAL

இப்படித் தான் வைரமுத்து, மெட்டி ஒலியை 'மெகா' பாரதம் என்று மெட்டி ஒலியின் முடிவு விழா உரையில் வர்ணித்தார் ! அதற்கு, எப்படி இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் பல அழகான கிளைக்கதைகளின் தொகுப்போ, அவ்வாறே மெட்டிஒலியும் என்று ஒப்பிட்டுக் கூறினார். மெட்டிஒலி ஏறக்குறைய 811 episodes (அதாவது, 162 வாரங்கள் !) கொண்ட ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் நான் ஒரு 150 episodes தான் பார்த்திருப்பேன் ! இருந்தும் எனக்கு கதையை புரிந்து கொள்வதில் ஒருபோதும் பிரச்சினை இருந்ததில்லை !!!!!

மெட்டிஒலி பலரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆனது. தொடரின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மக்கள் பிரச்சினைகள் ஆயின ! இத்தொடரின் பத்து எபிஸோடுகளையாவது பார்க்காதவர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று அடித்துக் கூறலாம். அவ்வளவு பிரபலம் அடைந்தது !

யதார்த்தமான மற்றும் தரையைத் தொடும் (down-to-earth !) கதையமைப்பு மெட்டிஒலிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனாலும், சரோ கதாபாத்திரம் வாயிலாக பெண்ணடிமைத்தனத்தையும், ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் கொடூரத்தையும் இவ்வளவு அதிகபட்சமாக காட்டியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ! தொடரில் வரும் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரம் பிரச்சினை இல்லாமல் இருந்த நாளே கிடையாது எனலாம். ஆனாலும் அவர் வெளிப்படுத்தும் சீர் தூக்கி நோக்கும் குணமும், மன உறுதியும் அலாதியானது. டெல்லி குமார் இவ்வேடத்தில் வாழ்ந்திருந்தார் என்று கூறலாம்.

மெட்டி ஒலி குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே ஆன கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, தொடரில் வரும் பல நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.

மெட்டி ஏற்படுத்திய ஒலியால், ஒன்பது மனிக்கு வேலையிலிருந்து பசியோடு வீடு திரும்பும் கணவன்மார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர் ! தாய்மார்கள் அழும் குழந்தைகளை மெட்டிஒலி தொடங்குவதற்கு முன்பே உணவு கொடுத்து உறங்க வைத்தார்கள் ! கூட்டுக் குடும்பங்களில் வாழும் இளம்தம்பதியினருக்கு கொஞ்சிப் பேச அவகாசம் கிடைத்தது ! ஊர் சுற்றி விட்டு வரும் பிள்ளைகள் மெட்டிஒலி சமயத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் நைசாக வீட்டுக்குள் நுழைய வழி ஏற்பட்டது. நகரின் ஒதுக்குப்புற வீடுகளில் திருடர்கள் தங்கள் கை வண்ணத்தை காட்ட வழி ஏற்பட்டது !

மெட்டிஒலி பார்த்த சில கணவர்கள் தாங்கள் ரவி மற்றும் மாணிக்கம் (கதாபாத்திரங்கள்!) போல் அவ்வளவு மோசமாக இல்லை என்று உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தனர். சிலர் கோபியும் தங்களை போல் ஒரு பெண்டாட்டி தாசன் என்று சிலாகித்தனர். இன்னும் சிலர், போஸ் போல தங்களது மனைவிகளை விட்டு எகிற முடியலையே என்று ஆதங்கப்பட்டனர். சில மாமியார்கள் ராஜம்மாவை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று மருமகள்களிடம் சுட்டிக் காட்டினர். சில பெண்கள் தாங்கள் தனம் போல வாயாடியாகவும், செல்வத்தின் மனைவி போல் ஓடுகாலியாகவும், கோபியின் வீட்டுப் பெண்கள் போல வம்படிப்பவர்களாகவும் இல்லை என்று ஆறுதல் அடைந்தனர்.

மெட்டிஒலியால் சில நேர்மறை விளைவுகளும் உண்டு ! மெட்டிஒலி பார்த்து, செல்வம் போல் ஒரு நல்லதம்பி இல்லையே என்று எண்ணிய அண்ணன்மார்களும், சிதம்பரம் போல் ஒரு பாசமிகு தந்தை இல்லையே என்று நினைத்த மகள்களும், போஸ் போல பாசமான மருமகன் இல்லையே என்றெண்ணிய மாமன்களும், ரவியின் தந்தை போல மாமனார் இல்லையே என்று நினைத்த மருமகள்களும் நிச்சயமாக உண்டு ! கணவனிடம் அல்லல்பட்டு, சொந்தக்காலில் நின்ற லீலாவையும், கணவனால் கைவிடப்பட்டும் வாழ்வை துணிந்து எதிர்கொண்ட நிர்மலாவையும் பார்த்து தன்னம்பிக்கை பெற்ற பெண்களும் இருப்பர்.

இந்த மெகா காவியத்தை ஒருவர் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் (back to back !) பார்ப்பதன் வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையே படைத்து விடலாம் ! ஒரு எபிஸோட் 20 நிமிடங்கள் (விளம்பர இடைவேளை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டால் கூட மெட்டிஒலியை (இடைவெளியே இல்லாமல்) முழுதும் பார்த்து முடிக்க, 16220 நிமிடங்கள் அல்லது 270 மணிநேரம் அல்லது 11 நாட்கள் ஆகும் !!!

முன்பு சன் டிவியில் "சித்தி" தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, பொதுவாக, அது தொடங்கும் நேரம் தான் நான் பணியிலிருந்து வீடு திரும்புவேன். என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே, உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 15, 2005

புது வலைப்பதிவர்க்கு TOP 10 HOT TOPICS !

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகள் வாயிலாக உலகப் பிரசித்தி பெறவும், உங்கள் பதிவுகள் கவனிக்கப்படவும், தங்களுக்கு அதிக வாசகர்கள் மற்றும் பின்னூட்டங்கள் கிடைக்கவும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை பற்றி உங்களது கருத்துக்களை எழுதுவது தான் !!! நீங்கள் துரிதமாக பிரபலமடைய / புகழ் பெற (15 நிமிடம் அல்ல!) இதுவே சிறந்த வழி என்று தெளிவது அவசியம் :)

10. கலாச்சார சீரழிவு மற்றும் நவீனப் பெண்ணியம்
9. இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சினை
8. தமிழ் குடிதாங்கிகளின் செயல்பாடுகள் ... மொழிப்போர் கலாட்டா
7. தினமலர் ஆதரவு அல்லது எதிர்ப்பு
6. ரோசாவசந்த் / டோண்டு / PKS அவர்களின் ஏதாவது ஒரு பதிவின் பின்னூட்டக் களத்தில், ஒரு நிலைப்பாட்டை எடுத்து, படு காட்டமாக விவாதம் செய்வது !!!
5. தமிழக வாரிசு (பா.ம.க, தி.மு.க) அரசியல் !
4. ரஜினி குறித்து விமர்சனம்
3. பெரியார் குறித்து விமர்சனம்
2. பழம் / நவ பார்ப்பனீயம் குறித்த அலசல்
1. விடுதலைப்புலிகள் எதிர்ப்பு


எச்சரிக்கை: மேற்கூறியவற்றை குறித்து எழுதுவதற்கு முன், அவை பற்றி ஓரளவு படித்துத் தெளிவது நல்லது !!! இல்லையெனில் Subject Experts உங்களை பந்தாடி விடுவார்கள் !!!

DISCLAIMER: இந்த தலைப்புகளை வைத்து நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சலுக்கோ, இன்னபிற உபாதைகளுக்கோ, சங்கடங்களுக்கோ(!) நீங்களே பொறுப்பாவீர்கள். உதாரணமாக, அனாமதேயங்கள் வசை பாடலாம், உங்கள் பெயரிலேயே போலிகள் பல பதிவுகளில் பின்னூட்டி பெயரைக் கெடுக்கலாம் !!!

Anyway, Try your luck and ALL THE BEST ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 13, 2005

இந்தியாவில் பயங்கர "சுடோகு" காய்ச்சல் பரவுகிறது !

***********************************************************
**********************************************************
***********************************************************
***********************************************************
***********************************************************

ஜப்பானிலிருந்து உருவான "சுடோகு" (SUDOKU) என்ற எண்கணித விளையாட்டு, இந்தியாவில் அதிவேகமாக பிரபலமடைந்து வருகிறது !!! உலகம் முழுவதும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் இவ்விளையாட்டை பல ஆங்கில தினசரிகள் (ஹிண்டு, ஹிந்துஸ்டான் டைம்ஸ், டெக்கான் குரோனிகள் ...) பிரசுரிக்கின்றன.

சுடோகு, கீழுள்ள படத்தில் உள்ளது போல், ஒரு (9X9) கட்டங்களாக (மேலும் ஒன்பது சிறு (3X3) கட்டங்களாகவும்) பிரிக்கப்பட்ட சதுரத்தில், சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டு காணப்படும். ஆட்டக்காரர், மீதியுள்ள கட்டங்களை, 1 முதல் 9 வரை உள்ள எண்களால், ஒரு எண் அது இடம் பெற்றிருக்கும் நீளவாக்கு வரிசையிலோ, அகலவாக்கு வரிசையிலோ, (3X3) சிறு சதுரத்திலோ, மீளவும் இடம் பெறாமல் நிரப்ப வேண்டும் !

Image hosted by Photobucket.com

ஜப்பானில், எண்பதுகளிலேயே பிரபலமான சுடோகு, இப்போது தான் உலகளாவிய மக்களின் ஆர்வத்தை தட்டி எழுப்பியுள்ளது. ரூபிக் கியூப் (RUBIK CUBE) ஒரு காலகட்டத்தில் சிறுவர்களையும், இளைஞர்களையும், பெரியவர்களையும் ஒருசேர வசப்படுத்தியது போல் தற்போதைய "சுடோகு" நிலைமையும் காணப்படுகிறது. எழுத்து விளையாட்டை (CROSSWORD PUZZLE) விடவும் சுடோகு அதிக பிரபலமாகும் என்று தோன்றுகிறது.

சுடோகு எண்கள் சம்மந்தப்பட்ட விளையாட்டு என்றாலும், அதன் கட்டங்களை நிரப்புவதற்கு பெரிய கணிதத் திறமை தேவையில்லை என்பதே இது மேலும் பிரபலமடைவதற்கு முக்கிய சாத்தியமாகத் தெரிகிறது ! எழுத்து விளையாட்டைப் போல சுடோகு விளையாட மெத்தப் படித்தவராகவும், சம்மந்தப்பட்ட மொழியில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவு உடையவராகவும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முரளி தேசிகன் என்ற மென்பொறியாளர், எந்தவொரு சுடோகுவின் அனைத்துக் கட்டங்களை நிரப்புவதற்கு ஒரு ஜாவா புரோகிராம் எழுதியுள்ளார் என்ற செய்தியும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 10, 2005

நாட்டாமை, தலைப்பை மாத்தி வை !!!

கார்த்திக்கின் இந்தப் பதிவு தந்த உற்சாகத்தில், நமது வலைப்பதிவர் சிலரின் தலைப்புகளை மாற்றினால் எப்படி இருக்கும் என்று விபரீத கற்பனை செய்ததன் விளைவு கீழுள்ளவை.
யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :)
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் !!!

முதலில் தமிழ்மணத் தலைவரிடமிருந்து தொடங்குகிறேன் !

காசி --- சித்தூர்க்காரனின் சிந்தனைக் குதறல்கள் அல்லது சித்தூர்க்காரனின் சிதறிய சிந்தனைகள்
தேசிகன் --- தேசிகன் வலைப்பதிவுக்கு வரலேன்னா ஜாக்கிரதை !
கார்த்திக் --- karthik's EVERYTHING is CLOGS !
ரோசாவசந்த் --- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் சண்டையும், சச்சரவும் சில செருப்படிகளும்
டோண்டு ராகவன் ---- Dondu's 'DONTS' ONLY
ஐகராஸ் பிரகாஷ் --- Prakash's "CHRONIC"les
அல்வாசிட்டி விஜய் --- அடிச்சுக் கொல்லு !
மூக்கு சுந்தர் --- என் கோக்குமாக்கு
தங்கமணி --- E(n) அலறல்
மாண்ட்ரீசர் --- விக்கல்
ராம்கி --- சில்லுண்டியின் பெருங்குழப்பங்கள்
மாயவரத்தான் --- ஆயிரம் ஆனாலும் நக்கல் போகாது !!! (அல்லது Narrow vision!)
இரவிக்குமார் --- நீங்கள் கேட்காதவை !!!
காஞ்சி பிலிம்ஸ் --- பாஞ்சிக் கடி !
ஆச்சி மகன் ---- சுற்றத்தின் கொடுமை
வந்தியத்தேவன் --- தொடரும் வம்படி !!!
என்றென்றும் அன்புடன் பாலா ---- ????????????????????


என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 08, 2005

Book MEME --- தொடரும் புத்தகச் சங்கிலி !!!

முதலில், என்னை(யும்!) அழைத்த (பரிந்துரைத்த!) 'யளனகபக' கண்ணனுக்கும், ராம்கி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக :)

புத்தக எண்ணிக்கை: இருபது தான் தேறும் ! பொதுவாக, நூலகங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி படிப்பது வழக்கம். அதே போல், பல புத்தகங்கள் (நான் படித்த பின்னர்) இரவல் கொடுத்து திரும்பி வரவில்லை :-(

கடைசியாக வாசித்த புத்தகம்: The Leader and the Damned by Colin Forbes (இரண்டாவது முறையாக!)

கடைசியாக வாங்கிய புத்தகம்: நாளாச்சு !!!!

படிக்க விரும்பும் புத்தகம்: ரஜினி, சப்தமா சகாப்தமா by ரஜினி ராம்கி (நன்றி மறக்கலாமா:))

படித்ததில் பிடித்த 7 ஆங்கில புத்தகங்கள் (in random order!!!)

1. Devil's Alternative - Frederick Forsyth (A wonderful spy thriller with great twists)
2. The Stone Leopard - Colin Forbes
3. ILLUSIONS: THE ADVENTURES OF A RELUCTANT MESSIAH --- Richard Bach
4. The PROPHET --- Kahlil Gibran
5. Life Divine --- Shri Aurobindo
6. Moscow rules --- Robert Moss
7. Not a penny more, not a penny less --- Jeffrey Archer

பொதுவாக, பல ஆங்கில நாவலாசிரியர்கள் நுணுக்கமாக விவரிப்பதில் (அதாவது, elaboration in narration) தமிழ் நாவலாசிரியர்களை விட சிறந்தவர்கள் என்பது என் கணிப்பு.

படித்ததில் பிடித்த 5 தமிழ் புத்தகங்கள்: (in order of liking!!!)

1. பாரதியார் பாடல்கள் --- அத்தனையும்
2. பிரிவோம் சந்திப்போம் --- சுஜாதா (என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய நாவல்)
3. பொன்னியின் செல்வன் --- கல்கி
4. ஸ்ரீரங்கத்து தேவதைகள் --- சுஜாதா
5. துணையெழுத்து --- அட்சரம் ராமகிருஷ்ணன்

நான் அழைக்க விரும்பும் 8 நபர்கள்:

1. ரோசா வசந்த்
2. மாண்ட்ரீசர்
3. DONDU Raghavan
4. அல்வாசிட்டி விஜய்
5. பத்ரி சேஷாத்ரி
6. சந்திரவதனா
7. சிங்கை அன்பு
8. "ப்ருந்தாவனம்" GOPI

தேசிகனுக்கு பிடித்த 5 தமிழ்ப் புத்தகங்களின் ஆசிரியர் யாரென்பது எனக்குத் தெரியும் என்பதால் அவர் பெயரை மேலே உள்ள பட்டியலில் இடவில்லை :) ராம்கி அவரை ஏற்கனவே அழைத்து விட்டார் !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, June 02, 2005

பல்லவியும் சரணமும் --- ஒரு சின்ன அலசல்

இதுவரை பதித்த 25 "பல்லவியும் சரணமும்" பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து நான் கவனித்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1. அனைத்து பதிவுகளுக்கும் அமோகமான வாசகர் ஆதரவு காணப்பட்டது. விடைகள் கண்டுபிடிப்பதில் பலத்த போட்டி நிலவியது !!!

2. பொதுவாக, பதிவை இட்டு சில மணி நேரங்களில் 90% விடைகள் சரியாக கண்டுபிடிக்கப்பட்டன

3. வாசகர்களால் கண்டுபிடிக்க முடியாதவை என்று பார்த்தால், மொத்தமாக, 15 தேறும் (அதாவது, கிட்டத்தட்ட 300 பாடல்களில்!!!)

4. ஐகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த், ஜெயஸ்ரீ, சந்திரவதனா, யோசிப்பவர், "யளனகபக" கண்ணன், அருப்புக்கோட்டையன் (கேசவ்), பரணீ, பரணீதரன், "பினாத்தல்கள்" சுரேஷ், தங்கம், சந்திரா, "குடிகாரனின் உளறல்கள்" என்ற வலைப்பதிவுக்கு சொந்தக்காரர், போன்றவர்கள் ரெகுலர் வாசகர்களாகத் திகழ்ந்தார்கள். இவர்களில், ஐகாரசும், ரோசாவும், சந்திரவதனாவும், ஜெயஸ்ரீயும் நிஜமாகவே 'பழைய பாடல்' புலிகள் :)

5. சீரியஸான ஆட்கள் என நான் நினைத்திருந்த ரவி ஸ்ரீனிவாஸ், 'உருப்படாதது' நாராயண், வெங்கட், அருள் (ரோசாவும் தான்!) போன்றவர்களும் "பல்லவியும் சரணமும்" போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

6. இன்னும் சில வாசகர்களை குறிப்பிட விரும்புகிறேன்:
வசந்தன்
BOSTON பாலா
POET ராஜ்குமார்
சீமாச்சு
டோ ண்டு
சிங்கை அன்பு
நிர்வியா
சுவடு சங்கர்
லதா
ராசா


என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails